வான்கா வரலாறு

LKR3,250.00

2 in stock

Author: Ajayan bala

வாழ்வின் முக்கியமான தருணங்கள் எது என என்னிடம் யாரேனும் கேட்டால் அது சில புத்தகங்களை நான் வாசித்த தருணங்கள்தான் என்பேன். அந்த தருணங்களை மட்டும் நான் சந்தித்திருக்காவிட்டால் இன்று வரையிலான என் வாழ்க்கை அதன் அர்த்தத்தையும் சாரத்தையும் பெருமளவு இழந்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு நண்பனை போல என் தோள் மேல் கைபோட்டு மெல்ல ஆன்மாவின் ஆழத்துள் என்னை அழைத்துச் சென்று வார்த்தைகளின் துணையோடு என்னை மேலும் பண்படுத்தி மேலும் ஆழமிக்கவனாய் மாற்றிதந்திருக்கின்றன. அத்தகைய தருணங்களில் மனம் தன் அழுக்குகளையெல்லாம் கண்ணீரின் வழியாக என்னுள்ளிருந்து வெளியேற்றும். இப்படியாக என்னை இதர மனிதர்களிடமிருந்து வேறுபட்டவனாக மாற்றிய மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக நான் கருதும் புத்தகம் வான்கோவின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி இர்விங் ஸ்டோன் எழுதிய லஸ்ட் பார் லைஃப்.
1995ல் நான் திரைப்பட உதவி இயக்குனராக முதல் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். அப்போதுதான் எனக்கு நண்பர் பாலகிருஷ்ணனின் அறிமுகம் நண்பர் செம்பூர் ஜெயராஜின் மூலமாக கிடைத்தது. பிற்பாடு கிங் மேக்கர் காமராஜ் எனும் படத்தை தானே தயாரித்து இயக்கிய பாலகிருஷ்ணன் அச்சமயத்தில் அவரும் எங்களை போல திரைத்துறையில் பிடிமானம் அற்றவராக இருந்தார். மாலை நேரங்களில் அவரது அலுவலகத்தில் மறைந்த எனது செம்பூர் ஜெயராஜ், ஞான சம்பந்தன், மற்றும் இடையில் மரணம் அழைத்துக்கொண்ட நண்பர் ராஜன் அர்விந்தன் ஆகியோருடன் அங்கே கூடி இலக்கியம்,சினிமா குறித்து சண்டைகளுடன் கூடிய விவாதம் நடத்துவோம். ஒரு மாலையில் நான் அங்கு சென்றிருந்த வேளையில் நண்பர் பாலகிருஷ்ணனின்மேசை மேல் ஒரு புத்தகம்.லஸ்ட் பார் லைஃப். வான்கோவைப் பற்றி இதற்குமுன்பே நான் கேள்விபட்டிருந்ததால் அவர்மேல் இயல்பான ஒரு ஈர்ப்பு முன்பே என்னுள் உறங்கிக்கொண்டிருந்தது. நண்பர் பாலகிருஷ்ணன் அப்புத்தகத்தைப் பற்றியும் அதிலிருக்கும் மனிதனின் வாழ்வுபற்றியும் சொல்லி வியந்தவிதம் அன்று இரவே கையோடு அதனை கொண்டு செல்ல வைத்து விட்டது.
படித்து முடித்தபோது நான் சற்று மாறியிருந்ததை உணரமுடிந்தது. வாழ்க்கைக்கு உண்மையாக இப்படியும் ஒருவன் இருக்க முடியும் என எனக்கு முதல் நம்பிக்கையை உருவாக்கி தந்த புத்தகம் அது. இதன் பிறகு தான் நான் தொடர்ந்து வாழ்க்கை வரலாறுகளாக தேடிபிடித்து வாசிக்க துவங்கினேன். ஏலூரு வாடகை புத்தக கடையில் நான் எடுத்த புத்தகங்களுக்கான வாடகையை கட்டுவதற்காக பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறேன். அப்போது நான் படித்த புத்தகங்கள்தான் இன்று சற்றும் எதிர்பாராமல் விகடனில் வாழ்க்கை வரலாறுகளை எழுத வாய்ப்பு கிடைத்தபோது நான் அறியாமலே என் எழுத்தை வடிவமைத்து தருகின்றன. அக்காலத்தில் இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கியின் சுயசரிதமான ரோமன் மற்றும் சார்லி சாப்ளினின் சுயவரலாறு போன்றவை என்னை முழுவதுமாக புரட்டி எடுத்த புத்தகங்கள். ஒரு உன்னதமான நாவலைக் காட்டிலும் இந்த புத்தகங்கள் பன்மடங்கு என்னை புடம் போட்டு வளர்த்திருக்கின்றன. உணர்ச்சி ததும்பும் சில இடங்களில் அலையாக என்னை மீறி வெளிப்படும் கண்ணீரின் மூலமாக எவரும் அடைய முடியாத வாழ்க்கையின் நிரந்தரமான உண்மைகளை நான் கடந்து வந்திருப்பதை இப்போது உணர்கிறேன். இப்படியாக வான்கோவின் வாழ்க்கை வரலாறு நான் படித்த முதல் ஆங்கில புத்தகம் என்ற பெருமையை கடந்து என் வாழ்வையே தீர்மானித்த புத்தகமாகவும் இருந்திருக்கிறது. அதன் பிறகு பல முறை லஸ்ட் பார் லைப் எனும் அந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்க முயற்சி செய்தபோது என் வாழ்க்கை சூழல் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. இறுதியாக நாயகன் தொடர் மூலமாக பலகோடி மக்களுக்கு அந்த மகோன்னதமான இதயத்தின் வாழ்வை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியுறுகிறேன். நான் அந்த மூலப்புத்தகத்தின் உயரத்தை அடைய முடியாவிட்டாலும் அந்த மலையின் ஒரத்தில் சிறு செடி செய்யும் காரியத்துக்கு நிகராகவாவது இந்த சிறிய புத்தகத்தில் செய்திருக்கிறேன் என உணர்கிறேன். இந்த இடத்தில் இப்புத்த்கத்தை முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்திய பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், என்னை மொழிபெயர்க்க சொல்லி ஏழு வருடங்களுக்கு முன் இப்புத்த்கத்தை வாங்கி பரிசளித்த நண்பன் ராஜகோபாலுக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர் வெளிவந்த போது என்னை பாராட்டி வாழ்த்து தெரிவித்த ஓவியர் மணியன் செல்வன், அவர்களுக்கும் முன்னுரை எழுதிதரும் ஓவியர் மருதுவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

அஜயன் பாலா

2 in stock